லுணுகலை பிரதேச சபையினால் மடூல்சீமை நகரில் உள்ள கடைத் தொகுதிகளுக்கு அறவிட தீர்மானிக்கப்பட்ட 4500 ரூபாயை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதுடன் பழைய கட்டணமான 900 ரூபாயை மாத்திரம் அறவிடபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பெருந்தோட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியிலும் சமூகம் சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் முன்னோடியானதாகவே இருந்து வருகின்றது. ஒரு காலக்கட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிரதேசம் என முடக்கப்பட்டிருந்த பிரதேசங்கள் மலையகத்தின் பிரதான நகரங்களாகவும் பொருளாதார மத்திய கேந்திரங்களாகவும் உருவாகி இருக்கின்றன.
இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் இட்ட அடிதளமே என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு மலையகத்தின் பல பின்தங்கிய பிரதேசங்களை அபிவித்தி செய்யப்பட்டதில் பதுளை மாவட்டத்தின் மடூல்சீமை நகரமும் ஒன்று என்பது குறிபிடத்தக்கது. மடூல்சீமை பெருந்தோட்ட யாக்கத்துக்கு சொந்தமான ரோபெரி, கொக்காகலை, பட்டாவத்தை, கல்லுள்ள, ஊவாகலை, வெரலுபத்தன, மஹதோவ போன்ற ஏழு தோட்டங்களை சார்ந்த 22 பிரிவுகளில் சுமார் பன்னிரெண்டு ஆயிரத்துக்கும் அதிகமான பெருந்தோட்ட பகுதியை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பொருளாதார, கல்வி, கலாசார தேவைகளுக்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் 1999 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்கள் அப்போது வகித்த தோட்டவுட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினூடாக மடூல்சீமை பிரதேச அபிவிருத்திக்காக கடைத்தொகுதி மற்றும் கலாசார மண்டபத்துக்கான வேலைத்திட்டங்களும் மக்களின் நலனுக்காக பதுளை மாவட்டத்தில் ஆரம்பித்து இறுதி வேலைத்திட்டமாகவும் உள்ளது.
எனினும் 1999 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் திடிர் மறைவுக்கு பிறகு 2001 ஆம் ஆண்டு வேலைத்திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவும் தோட்டவுட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக இருந்த கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் மடூல்சீமையில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் மடூல்சீமை நகரில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபமும் திறந்துவைக்கப்பட்டது.
இவ்வாறு கடைத்தொகுதிகள் கையளிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து மாதம் 900 ரூபா என்ற மாதாந்த வாடகை அரவிடப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் திடீரென லுணுகலை பிரதேச சபையினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு பிரதேச சபை உறுப்பினரகள் இருந்தும் சபையில் மாதாந்த வாடகை 4500 அதிகரிக்கப்பட்டு மடூல்சீமை நகர வியாபாரிகளுக்கு கட்டாயமாக மாதவாடகையாக 4500 செலுத்துமாறு கட்டளை விடுக்கப்பட்டது.
இப்பிரச்சிணை தொடர்பில் மடூல்சீமை நகர வியாபாரிகளினால் பிரதமரின் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இப்பிரச்சிணை தொடர்பில் லுணுகலை பிரதேச சபையின் தலைவர் ஜகத் சந்திர தலுகொடுவவிடம் மடூல்சீமை நகரின் வியாபாரிகளிடம் திடீர் மாதாந்த வாடகை அதிகரிக்கப்பட்டமை இந்த கோவிட் 19 தொற்று கால சந்தர்ப்பத்தில் பொருத்தமற்றது, வியாபாரிகளிடம் அதிகமான மாத வாடகை அரவிடும் சந்தர்ப்பத்தில் நுகர்வோருக்கு பாதிப்பாக அமைந்துவிடக்கூடாது, எனவே ஆரம்பத்தில் இருந்த மாத வாடகைக்கே இணங்குமாறு விடுத்த வேண்டுகோளின் கீழ் புதிதாக லுணுகலை பிரதேச சபையினால் மடூல்சீமை நகரில் உள்ள கடைத் தொகுதிகளுக்கு அறவிட தீர்மானிக்கப்பட்ட 4500 ரூபாயை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதுடன் பழைய கட்டணமான 900 ரூபாயை மாத்திரம் அறவிடபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.